February 15, 2013

உன் முடிவ சொல்லு...





உன் முடிவ சொல்லு, நீ என்ன கல்யாணம் பண்ணுவியா இல்லை கழட்டிவிட்டுறுவியா.. உன் பேச்சும் செயலும் மாறி போச்சு, நீ முன்ன மாறி இல்ல... மாறிட்ட... உனக்கு காதல் மட்டுமே பண்ணிக்கிட்டு ஊற சுத்திக்கிட்டே திரியனும், கல்யாணம் பண்ணனும்னு கேட்டா எந்த பதிலும் உன் வாயிலேந்து வரது கிடையாது என்று தினேஷிடம் கேட்டாள் மெர்சி.

ஐயோ, ஆரம்பிச்சுட்டியா... நான் எங்க வீட்ல எங்க அம்மாகிட்ட சொல்லிட்டேன் நம்ம காதல, அம்மா அப்பாகிட்ட சொல்றேன்னு சொல்லிடாங்க மெர்சி, உனக்கு எங்க அப்பா பத்தி தெரியும்ல.. அவரோட பேச்ச மீறி நடக்க எனக்கு தைரியம் கிடையாது.. ப்ளீஸ் கண்டிப்பா அம்மா அப்பாகிட்ட பேசி நல்ல முடிவு நமக்கு சொல்லுவாங்க.. சிகரெட்டை புகைத்தவாறு தினேஷ் மெர்சியிடும் சொன்னான்...

நிப்பாட்டு, உன்னோட இந்த பழைய கதையை கேட்டு போர் அடிச்சுருச்சு... நான் கிளம்புறேன்.. என்று மெர்சி கடற்கரை சாலையிலிருந்து அவள் வீட்டிற்கு நடக்கலானாள்... நடந்துக்கொண்டிருந்த மெர்சியை, கொஞ்சம் நில்லு மெர்சி என்று ஒரு குரல் கேட்க, திரும்பி பார்த்தாள் மெர்சி.. ஏய், ரிஸ்வானா நீயாடி, எப்படி இருக்க காலேஜ் முடிஞ்ச பிறகு இப்போ தான் பார்க்கிறோம்.. ஆளு கொஞ்சம் குண்டாயிட்ட.. என்று தன் கல்லூரிக்கால தோழியை பார்த்த மகிழ்ச்சியில் மெர்சி பேசினாள்..

மெர்சி, நீ அப்படியே தாண்டி இருக்க.. கோச்சுக்காத நான் இந்த ஊர்ல கொஞ்சம் நாளா இல்லை, IELTS பரீட்சைக்கு படிக்க நான் சென்னை போயிருந்தேன், அங்கே எங்க நூர் அக்கா வீட்ல தங்கி படிச்சேன், இப்போ எல்லா எக்ஸாம் முடிஞ்சு நான் தேர்வாகிவிட்டேன். கனடால அல்பேர்டா யுனிவர்சிட்டில சீட் கிடைச்சுருக்கு. எப்போ வேணாலும் கனடா போற மாறி இருக்கும்.. உன்னை பார்த்தவரை சந்தோஷம்.. என்று ரிஸ்வானா கூற

ரிஸ், சந்தோஷம்டி.. ஹ்ம்ம் அப்போ காலேஜ் படிப்பு முடிச்ச உடனே உனக்கு உங்க வாபா நிக்காஹ் பண்ண போறாருன்னு சொன்ன, நீ இப்போ கனடா போறேன்னு சொல்ற.. மெர்சி கேட்க.... எனக்கு PG நானோ டெக்னாலஜி படிக்க ஆசை இருக்குன்னு வாபாக்கிட சொன்னேன், அதுவும் வெளிநாட்டுல.. எங்க வாபா ஒத்துக்கிட்டாங்க.. என்னோட விருப்பத்த வாப்பா எப்போதும் மதிப்பாங்க.. அது சரி, இஞ்சினீயர்.... நீங்க என்ன பண்றீங்க... என்று சிரித்தவாரே ரிஸ்வானா மெர்சியை பார்த்து கேட்டாள்..

புன்னகை பூத்தவாறு, நான் சும்மா தாண்டி இருக்கேன்..வேலைக்கு போக விருப்பம் இல்ல...அநேகமாக எனக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும். ரிஸ்வானா குறுக்கிட்டு வாவ், மெர்சி யாரு நம்ம கூட படிச்சா தினேஷா... உங்க லவ் அப்போலேந்து காலேஜ்ல ரொம்ப பாபுலர்.. கங்ராட்ஸ் டி மெர்சி..

நானும் அத தான் விரும்புறேன், பட் அப்படி நடக்க வாய்ப்பு இருக்காது போல.. தினேஷ் முன்னாடி மாறி இல்ல, நாம படிச்சு முடிச்சு இப்போ ஒரு வருஷம் ஆகுது இன்னும் ஒரு வேலைக்கு கூட போகணும்னு அவனுக்கு எண்ணம் இல்ல.. அதுவும் இல்லாம எங்க வீட்ல ஒகே சொன்னாலும் அவங்க அப்பா மதம் அது இதுன்னு எதிர்பாங்க போல.. அதிகமா இது சரிப்பட்டு வராது, அதுவும் இல்லாம நான் ரொம்ப குழப்பிக்க கஷ்டபடுத்திக்க விரும்பல.. பாப்போம் ரிஸ்வானா...
 
எதுவாக இருந்தாலும் நல்ல முடிவு எடுடி, உன்னோட வாழ்க்கை உனக்கு தான் எப்படி அமைக்கணும்னு தெரியும் பார்த்துக்கோ மெர்சி.. பார்க்கலாம் கண்டிப்பா உன்னோட கல்யாணத்திற்கு கூப்பிடு மெர்சி.. என்று ரிஸ்வானா கூற.. ஹ்ம்ம் கண்டிப்பா கூப்பிடுவேன் நீ கனடா போகுறதுக்கு முன்னாடி சொல்லிட்டு போடி என்று இரு தோழிகளும் விடை பெற்றனர்.
மெர்சி வந்துட்டியா... வீட்டிற்க்குள் நுழைந்தவுடன் அவள் அம்மா கேட்க..

என்னமா சொல்லு என்றால் மெர்சி.. 

நாங்க அந்த பைய்யன் வீட்டுக்கு என்ன பதில் சொல்லுறது, அவங்க நம்மோட பதிலுக்காக ஒரு மாசமா காத்துகிட்டு இருக்காங்க, நல்ல சம்மந்தம் மெர்சி.. பையன் நல்ல படிச்சு இருக்கான், நம்ம மோலி அத்தையோட உறவுக்கார பையன்.. இப்போ ஆஸ்திரேலியாவுல டாக்டரா இருக்கான்.. உனக்கு ஏத்த மாறி இருக்கான் மெர்சி.. நீ இன்னும் திணேஷ தான் நம்புகிட்டு இருக்கியா.. எனக்கு உன்னோட முடிவ சொல்லு மெர்சி.. இதுக்கு மேலே எனக்கு பொறுமை இல்லை என்று மெர்சியின் அம்மா கோபித்தவாறு உள்ளே சென்றாள்.

மெர்சி அவள் அறைக்கு சென்றாள்.. கொஞ்சம் மெளனமாக சிந்தித்தாள்.. தினேஷிற்கு கால் செய்தாள்.. 

தினேஷ் மறுமுனையில் பேச, தினேஷ் உன்னோட முடிவ சொல்லு.. இதுக்கு மேலே டைம் இல்ல.. சீரியஸா பேசுறேன்.. உங்க அப்பா என்ன சொல்றார்.. உங்க அம்மா பேசிட்டாங்களா.. நம்ம விஷயம் என்ன ஆச்சு.. என்று அடுத்து அடுத்து மெர்சி கேட்க 

தினேஷ் பதிலாக மெளனமாக இருந்தான்.. 

நான் பேசுறது கேட்குதா, ஏன் எந்த பதிலும் காணோம்... தினேஷ் தினேஷ்... என்று மெர்சி கேட்க...
மெர்சி எங்க அப்பா ஒத்துக்க மாட்டார்... நாம் ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்குவோம்...என்று தினேஷ் சொல்ல 

இந்த ஓடிப்போயிலாம் கல்யாணம் பண்ண எனக்கு விருப்பம் இல்ல, தினேஷ்... எங்க வீட்டுல உள்ளவங்கள நான் காய படுத்த விரும்பல... நான் எதுவும் பேச விரும்பல.. இனிமே நம்மகுள்ள ஒன்னும் கிடையாது தினேஷ்.. நான் உன்னை மறந்துடுறேன் நீயும் என்னை மறந்திடு.. டேக் கேர் என்று கண்கள் கலங்கியவாறு தன்னுடைய செல்போன்னை அணைத்து விட்டாள்...

மெர்சி அவள் அம்மாவை கண்டவுடன் கட்டி அணைத்த படி அழுக, மகளை தேற்றியவாறு.... மெர்சி.... அம்மா உனக்கு எப்போதும் நல்லது தான் செய்வேன். என்னோட மகள் எப்படி இருந்தா சந்தோசமாக இருப்பான்னு எனக்கு தெரியும். கர்த்தரோட ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு மெர்சி.. 

மெர்சியின் அம்மா மோலி அத்தையை செல்லில் அழைத்து மெர்சி கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்டாள்.. இனி நடக்க வேண்டியத பாருங்க...  

கதை : ஆயிஷாபாரூக் 

1 comment: