September 12, 2013

ஒலித்திடு - 6

  • நிம்மதியான வாழ்க்கை அமைவதே ஒவ்வொருவரின் ஆசை.. அதற்க்கு நாம் நமக்கு நிம்மதி தரும் செயல்கள் செய்தாலே போதும் நம் வாழ்க்கை நிம்மதியாக அமையும். நிம்மதியின் தொடக்கம் நாம் செய்யும் செயல்லி ருந்தே பிறக்கிறது.
  • வீடு ஒரு அழகான தேன்கூடு, அதை கலைப்பதும் இல்லை அப்படியே காப்பதும் அந்த வீட்டின் பெண்ணின் கையிலே உள்ளது. தேன்கூடு போன்ற கூட்டு குடும்ப உறவுகள் மறைந்து இன்று குருவி கூடு போல தன் கணவன், தன் பிள்ளைகள் என்று சுருங்கியுள்ளது.
  •  எந்த ஒரு ஆணையும் 1 என்றோ எந்த ஒரு பெண்ணையும் 2 என்று யாரும் கூப்பிடுவது கிடையாது. மாறாக திருநங்கைகளை ஒன்பது என்று கேலி செய்யும் மிக இழிவான பழக்கம் சிலருக்கு உள்ளது. அத்தகைய தவறை உறுதி படுத்தும் விதமாக மத்திய அரசு பொருளாதார கணக்கெடுப்பு படிவத்தில் ஆண் என்பதற்கு 1 என்றும், பெண் என்பதற்கு 2 என்றும் குறிப்பிட்டு விட்டு ஆண் பெண் அல்லாத பாலின பிரிவுக்கு 3 என்று குறிப்பிடாமல் 9 என்ற குறியீட்டு எண் பயன்படுத்தப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கதக்கது. இது இழிவான கீழ்த்தரமான எண்ணம் கொண்ட வகையில் உள்ளது.
  •  தான் பெற்ற குழந்தை திருநங்கையாக மாறியதால் வீட்டை விட்டு வெளியேற்றிய தந்தையர்கள் பலரை கண்டதுண்டு. திருநங்கைகள் என்பது அவமானம் கிடையாது என்பதை தந்தைகள் உணர வேண்டும். தந்தையின் கடமை ஆற்றாது வெறும் சுகத்திற்காக பிள்ளை பெற்றவர்கள் எல்லாம் ஒரு போதும் தந்தையர் ஆக முடியாது.
  •  தங்களின் ஆண் பிள்ளை பருவ வயதில் பெண் தன்மையுடன், பெண் உணர்வுகளுடன் இருப்பதால் ஏற்க மறுக்கும் பெற்றோர்கள் ஏராளம். இத்தகைய நிகழ்வை தங்களுக்கு அவமானமாக கருதி திருநங்கைகளை வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர், அப்படி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட திருநங்கைகள் ஏராளம். ஒன்று இரண்டு தான் தப்பி வீட்டில் மனமுவந்து சேர்க்கப்பட்டவர்கள். அணைத்து பெற்றோர்களும் திருநங்கைகளை தங்கள் குடும்பத்துடன் சேர்த்து கொண்டு மற்ற ஆண் பெண் பிள்ளைகளை போல சரி சம அன்பு மரியாதையுடன் ஏற்றுகொள்ள வேண்டும். திருநங்கைகளின் வாழ்க்கை தரநிலை முதலில் இங்கு இருந்து தான் உயர்த்தப்படுகிறது. மாற்று திறனாளிகளை போல தான் மாற்று பாலியல் மக்களும் என்பதை சமுதாயமும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இன்று உள்ளது.
  •  ஒவ்வொரு இரவு உறக்கத்திற்கு பிறகு விடியும் பகலில் நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு காத்திருக்குது நண்பர்களே...
  •  அன்பை பற்றி பேசி/எழுதி வீட்டிலுள்ளவர்களுடன் சிடு சிடுவென இருந்தால் பிரயோஜனம் இல்லை. அன்பு உணர்த்துவதில் தான் உள்ளது, மனதுக்குள் மறைத்து வைப்பதில் இல்லை.
  •  நம் மீது அன்பு செலுத்தும் உறவுகளை எந்த வேற்றுமையின்றி நேசிக்க தெரிந்தால் நாமே உலகில் பெரிய அதிர்ஷ்டசாலி.
  •  தாயின் கருவறையில் குழந்தைக்கு கிடைக்கும் பாதுகாப்பிற்கு ஈடு இணை வேறேது. தாயின் கருவறையிலிருந்து குழந்தை வெளியே வந்த போது ஏற்படும் முதல் பிரிவு அது. பிரிவின் வலியின் தொடக்கம் தான் குழந்தையின் முதல் கண்ணீர். குழந்தை அன்று முதல் பிரிவின் வலியை ஏற்றுக்கொள்கிறது. அதனால் தான் ஒருவர் நம்மை விட்டு பிரியும் போது நம் கண்களில் கண்ணீர் சுரக்கிறது. பிரிவு என்பதை தடுக்க முடியாது அதை ஏற்று கொண்டே வாழ வேண்டும் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்.
  •  கோவிலில் பட்டும் நகைகளுடன் அலங்கரித்து நிற்கும் அம்மன்களுக்கு ஏன் புரியவில்லை தெருவில் கிழிசல் ஆடையுடன் இருப்பவளும் ஒரு பெண் தான் என்று...
  •  வேலை தேடுபவர்களும், தற்போதைய வேலையிலிருந்து வேறு தொழிற் நிறுவனங்களுக்கு மாற நினைப்பவர்களும் சுயதகவல் அட்டவணை(Resume), உடல் மொழி(Body Language), நேர்காணல்(Interview) போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி முக்கியமாக நிறுவனங்கள் தங்களிடம் எதிர்பார்க்கும் ஆளுமை பண்புகள் (Personality traits)இருக்கிறதா என்பதை பரிசோதிக்க மறந்து விடுகின்றனர். தொழிலறிவு (Professionalism), உயர் ஆற்றல்(High energy), நம்பிக்கை(Confidence),சுயமதிப்பீடு(Self assessment), அறிவுசார் ஆர்வம்(Intellectual curiosity) போன்ற ஆளுமை பண்புகளை பன்னாட்டு நிறுவனங்கள் வேலை தேடி வரும் ஊழியர்களிடம் பெரிதும் எதிர்பார்கிறார்கள். நிறுவனங்கள் எதிர்பார்க்கும் ஆளுமை பண்புகள் வளர்க்காமல் வார்த்தை ஜாலங்களுடன் கூடிய Resume, தேர்ந்த உடல் மொழி கொண்டு மட்டும் இன்றைய தொழிற் போட்டிக்கான நேர்காணலில் வெற்றி பெற முடியாது.நிறுவனங்கள் எதிர்பார்க்கும் பண்புகள் திறன்களுடன் நீங்கள் உங்களை தயார்படுத்திக்கொண்டு போட்டி களத்தில் குதித்தால் நீங்களே வெற்றியாளர்கள்.
  •  மதத்தின் ஆளுமைகள் உள்ள நாடுகளில் பெரும்பான்மை கொண்ட மதம் என்பது சிறுபான்மை கொண்ட மதங்களை கொள்கை ரீதியாகவோ இல்லை அரசியல் ரீதியாகவோ இல்லை சட்ட ரீதியாகவோ ஒடுக்குகிறது.
  •  உலக தற்கொலை தடுப்பு தினம் ---- எங்களின் பிறப்பின் மீது சமூகம் தொடுக்கும் ஒடுக்குமுறை அடக்குமுறை காரணமாக வீட்டிலிருந்து புறக்கணிப்பு, இளம் வயதில் கல்வி தடை ஏற்படும் சூழ்நிலை, வேலைவாய்ப்பு இல்லாமை, கேலி கிண்டல், காதலும் திருமணமும் கைகூடாமை, சமூகத்தில் சமநிலை நிராகரிப்பு, தனிமை, மனஅழுத்தம், தொய்வு, கவலை இப்படி பல காரணிகள் இருந்தும் வாழ்கையை வெறுக்காமல் வாழ்ந்தே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையில் தற்கொலை பற்றிய சிந்தனை சில நேரம் தோன்றியும் அதை புறந்தள்ளிவிட்டு வாழும் மனதைரியம் கொண்டு வாழ்கிறோம். எங்களை கண்டாவது உங்களின் மனவலிமையை அதிகரித்து கொள்ளுங்கள்...
  • எப்போதும் நம்மை சுத்தி இருக்கும் நாலு பேரு நம்மள பத்தி நாலு விதமா பேசுவாங்க, இவங்க வாய்க்கு பயந்தே வாழும் சமூக கட்டமைப்பு கொண்டது நம் இந்திய குடும்ப அமைப்புகள். நம் பெற்றோர்கள் நமக்கு சொன்ன இதே வழிமுறையை தான் நம்ம குழந்தைகளுக்கு தெரிவித்து வழிநடத்துறோம்... அப்படி பேசுற அந்த நாலு பேரு நமக்கு உப்பு, புளிக்கு கூட ஆகபோறது இல்லை அப்படிங்கறது தான் இதுல வேடிக்கையான விஷயம். என்ன ஒரு மடத்தனம் பண்றோம்.
  • நம்மை சுற்றி நடப்பவையை கண்டு உள்ளம் உற்சாகம் அடைவதை விட நம் உள்ளத்தில் உற்சாகம் ஏற்பட்டு நம்மை சுற்றியுள்ள விஷயங்கள் சிறப்பாக அமைந்தால் அதுவே பெருமகிழ்ச்சி கொடுக்கும்.  
  • குடும்ப தொடர்கள் என்கிற பெயரில் தொலைகாட்சிகளில் வெளிவரும் தொடர்கள் அனைத்தும் குடும்பத்திற்கு ஏற்ற தொடர்கள் இல்லை. ஒரு பெண் ஒரு பெண்ணை கொடுமை படுத்துவது, அடுத்தவள் கணவனை அபகரிக்க நினைப்பது, அடுத்தவரின் குடியை கெடுக்க நினைப்பது, மாமியார் மருமகள் சண்டை இப்படி அடுக்கி கொண்டே போகலாம். எங்கள் வீட்டில் ஒருவாறு நான் சண்டையிட்டு இது போன்ற தொடர்களை நான் பார்க்க அனுமதிப்பது கிடையாது. விளைவு ஓலமில்லா மாலை பொழுதுகள், less டென்ஷன். இது போன்ற குடும்பம் கலைக்கும் தொடர்கள் குழந்தைகளுக்கும் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் என்பதை குடும்ப பெண்கள் கருத்தில் கொள்ளவும். 
  • என்னை யாருடனும் ஒப்பிடுவதை நான் விரும்புவது கிடையாது. உயர்ந்த கோபுரமும் தாழ்ந்த மணல் குழியும் எனக்கு ஒப்பிடு கிடையாது. என் பாதை, என் செயல், என் கவனம் எல்லாம் எனக்கே உரிய தனித்தன்மை வாய்ந்தது. நீங்களும் யாருடனும் உங்களை ஒப்பிட்டு நினைக்க வேண்டாம்.
  • மனிதனுக்கு உதவி புரிதல், இனிமை, அன்பு, பொறுமை, பணிவு, நேர்மை, எளிமை, தன்னடக்கம் போன்ற நல்ல குணாதிசியங்கள் இருக்கும் அதுபோல பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, அவதூறு சொல்வது, கர்வம், ஆணவம், பழிவாங்கல், திமிர் என்ற சில கெட்ட குணாதிசியங்கள் இருக்கும். நாம் பழகும் நபர்களிடம் நல்ல குணாதிசயம் மட்டும் தேர்ந்தெடுத்து பழகுவோம் தோழமைகளே. 
  • அவரவர் உலகில் அவரவர் ராஜா ராணி.... அவர் உலகம் ஓரடி, பத்தடி, நூறடி, ஆயிரமடி என்பது அவர்கள் காணும் கற்பனையை பொருத்து... மிகைப்படுத்தி வாழும் வாழ்கையும் ஒரு கட்டத்தில் சலிப்பே ஏற்படுத்தும்.
  • ஒருவரை தூற்றும் முன் அதற்கு முதலில் நீ தகுதி உள்ளவனா என்று யோசி... இல்லையென்றால் சூரியனை பார்த்து நாய் குறைப்பது போல ஆகிவிடும்.
  • தோழமை காதலாக மாறலாம், காதல் என்றும் தோழமையாக மாற முடியாது. எங்கோ ஓர் இடைவெளி காயம் ஆறாத ரணமுடன் தவித்து கொண்டே இருக்கும். காதலை இழந்த உள்ளங்களுக்கே அந்த தவிப்பும் உணர்வும் புரியும். 
  • தொண்டர்கள் நூறு பேரு இருந்தாலும் அவர்களுக்கு சரியான ஒரு தலைவன் கிடைக்காவிட்டால் அந்த நூறு பேரின் எதிர்காலம் கேள்விகுறி ஆகும், அது போல நல்ல தலைமை நிர்வாகத்திற்கு அமையாவிட்டால் அந்த நிர்வாகமே மோசமாகிவிடும். ஆயிரம் வால்கள் முக்கியம் அல்ல அவர்களை வழிநடத்தும் ஒரு தலையே முக்கியம்.
  • ஒவ்வொரு திருநங்கையும் போராளி தான்... தன்னுடைய அடிப்படை வாழ்வுரிமைக்காக தினம் சந்திக்கும் சாதாரண மனிதரிடம் முதல் அரசு வரை மனப்போராட்டம், உரிமை போராட்டம் என்று நீள்கிறது. 
  • புதிர் விளையாட்டில் எங்காவது பதில் ஒளிந்து கொண்டுருப்பதை போல நம் வாழ்க்கை விளையாட்டிலும் பதில் எங்காவது ஒளிந்து கொண்டு இருக்கும். அந்தப் பதிலை தேடி கண்டு பிடிப்பவர்கள் வாழ்க்கை என்னும் புதிர் விளையாட்டிலும் ஜெய்கின்றனர். பதிலைக் கண்டுப்பிடிக்க ஒரு சிலருக்கு சில நாட்கள்,மாதங்கள், வருடங்கள் ஆகிறது அல்லது பதிலைக் கண்டுபிடிக்காமலே வாழ்க்கை முடிகிறது. வாழ்க்கை என்பது உண்மையில் புதிர் தான்  .
  • இந்தியாவில் ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு குழந்தைகாவது கல்வி கிடைக்காவிட்டாலும் அது பின்னடைவே. நாம் எந்த அளவில் கல்வியில் உயர்ந்தோம் என்பதை விட நம்மை சேர்ந்த அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள் என்று சொல்வதில் உள்ள சிறப்பு மிகப்பெரியது. கல்வி வாழ்கையில் நிச்சயம் ஒரு மாற்றம் செய்யும்.
  • உங்கள் ஜாதியை (ஆண்ட, ஆளாத எல்லா கருமாந்திரமும்), மதத்தை நிலை நிறுத்தி உங்கள் மனித நேயத்தை புதைக்காதீர்கள். பிணங்களுக்கும் உயிருடன் இருக்கும் உங்களுக்கும் பின்பு வித்தியாசம் தெரியாது. 
  • நமக்கு பிகவும் பிடித்த நபர்களே சில நேரம் மன உளைச்சல் தருகிறார்கள். இது போன்ற சூழ்நிலையில் தான் நாம் பக்குவத்துடன் செயல்பட வேண்டும். தளர்ந்தோ உடைந்தோ போக கூடாது. முதலில் மனஉளைச்சல் நீங்க மூச்சு பயிற்சி, தியானம், கவனத்தை வேறு விருப்பத்தில் திருப்புவதில் ஈடுபட வேண்டும். பின்பு நிதானமாக பிரச்னையை எதிர்கொண்டு அதற்க்கு தீர்வு காண முற்பட வேண்டும்...
    யாவும் நலமே...மனமும் நலமே... 
  • நீங்கள் யாரை மிகப் பெரிய தைரியசாலி என்று நினைகிறீர்களோ.... உண்மையில் அவர்கள் உங்களை விட பயந்தவர்கள் தான், தைரியத்தை அவர்கள் பழக்கப்படுத்தியதால் தான் தைரியசாலிகளாக மாறினார்கள்... உங்கள் மனமிடம் உள்ளது பயமும் தைரியமும்...          
ஆயிஷாபாரூக்