January 7, 2013

ஆண்களுக்கு அறிவுரை கிடையாதா ?



பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள் பெரும்பாலும் சில ஆண்களால் நிகழ்த்தப்படுகிறது. வழக்கம் போல பல பெண்ணடிமை போற்றும் பிற்போக்கு சிந்தனைவாதிகள் பெண்களுக்கே அறிவுரை வழங்கி ஆண்களுக்கு எந்த வித அறிவுரையும் வழங்காமல் விட்டுவிடுகின்றனர். அடிமை தனத்தில் ஊன்றிய சில பெண்களும் இதை அமோதிக்கின்றனர். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு, கொடுமைகளுக்கு சில பெண்களை விட ஆண்களுக்கே அதிக அறிவுரை தேவைப்படுகிறது. சில வக்கிர எண்ணம் கொண்ட ஆண்களுக்காக நான் ஒட்டு மொத்த ஆண்களை சாட வில்லை.

பெண்களின் கற்பை ஆசை வார்த்தை பேசி மயக்கும் சில நயவஞ்சக ஆண்களும் உண்டு, பெண்களின் கற்பை அடாவடியாக பலாத்காரம் செய்து அபகரிக்கும் ஆண்களும் உண்டு, பெண்களை தோழியாக, நல்ல சகோதரியாக, நல்ல மனைவியாக பெண்களை போற்றும் ஆண்களும் உண்டு. பெண்களுக்கு மட்டும் தான் கட்டுப்பாடா ? விதிமுறைகளா ? இன்னும் எத்தனை காலம் இந்த பெண்ணடிமை கோட்பாடு ? ஆண்களுக்கு எந்த அறிவுரையும் கிடையாதா ? ஆண்களுக்கு கற்பு இல்லையா ?

 பெண்களை பண்டைய காலம் தொட்டு சிறுமை படுத்தி வந்த போக்கு படிப்பறிவு இல்லாத ஆதிமனிதனிடமும் இருந்தது தற்போது படிப்பறிவு உள்ள அதிநவீன மனிதனிடமும் இருக்கிறது. இறைவன் படைப்பில் அனைவரும் சமம் என்பது ஏட்டளவில் இருந்தாலும் எண்ணத்தில் உதிர்ந்தாலும் நடைமுறையில் வேறுவிதமாய் இருக்கிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை, அச்சுறுத்தல், அடக்குமுறை போன்ற செயல்கள் குறைய பல பெண்ணடிமை போற்றும் பிற்போக்கு பழமைவாதிகள் வழக்கம் போல பெண்களுக்கு மட்டும் தங்களின் அறிவுரை வரிகளை உதிர்த்து விட்டு செல்வர். அவர்களுக்கு என் கேள்விகள் ?

பலர் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று உபதேசம் செய்வது எதற்கு ? பெண்கள் தாங்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று கருதி தானே ? உங்களின் அறிவுரை படி பெண்கள் உங்களின் உபதேசங்கள் கேட்டு வாழ்கிறாள் என்றாலும் கூட பாலியல் தொல்லைக்கு, அச்சுறுத்தலுக்கும் ஆளாகமால் இருக்கிறாளா ?

பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என்று கூறும் மேதாவிகளுக்கு ? உங்களின் கூற்று படி பெண் வீட்டை விட்டு போகவில்லை. அப்படி இருந்தும் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஏன் பாலியல் தொல்லை நடக்கிறது? வீட்டில் இருக்கும் பெண் தன்னுடைய நெருங்கிய உறவுமுறைகளால் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறாள். இத்தகைய செய்திகளை படிக்காமல் நம் செவிகள் கடந்துது இல்லை. இப்படி காமவெறி பிடித்த நெருங்கிய உறவுகளுக்கு உங்கள் அறிவுரை கிடையாதா?

பெண்கள் கவர்ச்சி உடை அணிவதால் பாலியல் பலாத்காரம் நடக்கிறது என்று கூறும் அறிவுஜீவிகளுக்கு, ஒரு ஐந்து வயது சிறுமி கெடுக்கப்படுகிறாள் என்று செய்தி வருகிறது..? அந்த சிறுமி என்ன கவர்ச்சியாக இருந்தாள் உங்கள் மனம் சபலப்பட.. சாலையில் திரியும் மனவியாதி பெண் கற்பழிக்க படுகிறாள், அவளிடம் உங்கள் மனம் சபலப்பட நீங்கள் என்ன கவர்ச்சி கண்டீர்கள்?

பொது இடங்களில், பேருந்தில் பெண்களை கூட்டத்தில் உரசுவது முதல் அலுவலக வேலைகளில் பணிபுரியும் பெண்கள் பல வகைகளில் பாலியல் தொலைக்கு ஆளாகின்றனர்.அலுவலக பணியில் உள்ள பெண்களை காம கண்ணோட்டத்தில் காணும் ஆண்களுக்கு உங்கள் அறிவுரை கிடையாதா?

உடை குறைத்தால் வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரு பெண்ணின் சூழலை நன்கு பயன்படுத்தி நடிகைகளை கவர்ச்சி பொருளாக திரை சந்தையில் விற்கும் நபர்களுக்கு உங்கள் அறிவுரை கிடையாதா?

ஒரு நடிகை குடும்ப பாங்காக நடித்தால் உங்களில் எத்தனை பேர் ரசிப்பீர்கள் ? பதின்ம வயது விடலை முதல் பல்லு போன கிழவன் வரை நடிகையின் தொப்புள் தெரியும் சேலை அசைவிற்கும், நீச்சல் உடை காட்சிகளையும் கை தட்டி, விசில் அடிக்கும் ஆண்களுக்கு உங்கள் அறிவுரை கிடையாதா?

கல்லூரியில் படிக்கும் பெண்களை சரிசைத்து ஒருமுறையாவது தன்னுடைய பாலியல் இச்சையை தீர்க்க துனியம் ஆண்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு உங்கள் அறிவுரை கிடையாதா?

பள்ளியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண் வாத்தியார்கள் சிலர் அடிக்கடி செய்திகளில் அடிபடுவது உண்டு. அவர்களுக்கு உங்கள் அறிவுரை கிடையாதா?

இப்படி எங்கு பார்த்தாலும் சில ஆண்கள் பெண்களை ஏதாவது தனக்கு கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி துன்புறுத்திகின்றனர். பெண்களுக்கு அறிவுரை வழங்குவதை விட ஆண்களுக்கு அறிவுரை வழங்குங்கள் பெண்கள் காமத்திற்கான அடையாளம் இல்லை என்று, பெண்கள் வெறும் சுகம் கொடுக்கும் கருவிகள் இல்லை என்று சொல்லுங்கள்.

எந்த பெண்ணும் ஆணை கற்பழிக்க வா என்று அழைப்பது இல்லை, ஆண்கள் தான் அடாவடியாக பெண்களை பாலியல் தொல்லை செய்கிறான். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும், தெருவில் வாழும் பெண்களுக்கும், பொது இடங்களில் போகும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லையென்றால் ஒரு பெண் எங்கே வாழ்வாள் ? எங்க போவாள்?

அவசியம் பெண்களை விட ஆண்களுக்கே அறிவுரை தேவைப்படுகிறது.

அன்புடன்
ஆயிஷாபாரூக் 

9 comments:

  1. ஆண்களுக்கு அறிவுரை வழங்குங்கள் பெண்கள் காமத்திற்கான அடையாளம் இல்லை என்று, பெண்கள் வெறும் சுகம் கொடுக்கும் கருவிகள் இல்லை என்று சொல்லுங்கள். உணர்ந்திருந்தால் இப்படியான அவலங்கள் நிகழுமா ?

    ReplyDelete
  2. சரியான சாட்டையடி பதிவு நண்பரே!
    குற்றம் புரிந்தவருக்கு தீர்வு சொல்லாமல் பாதிக்கப் பட்டவருக்கே தண்டனை தருவது போல தீர்வு சொல்லும் ஆணாதிக்க உலகம்.

    உடலின் ஒரு சிறு பகுதி வெளியே தெரிந்தாலும் காம வெறி பிடிக்கும் ஆண்களுக்காக உடல் முழுவதும் மறைத்த படி பெண் போக வேண்டுமாம்.
    இதில் காமம் தலைக்கேறிய ஆணிற்கு தானே வைத்தியும் தேவை மாறாக பெண்களுக்கே ஆலோசனையும் தீர்வையும் கூறுகிறார்கள்.

    புதுவை அரசு கூட புது சட்டம் அமுல் படுத்த போகிறது. மாணவிகள் மேலே ஒரு கோட்டு அணிய வேண்டுமாம்.இதை எங்கே போய் சொல்ல...

    ReplyDelete
  3. தமிழ் மணத்தில் ஓட்டு போட இயலவில்லை என்னவென்று பார்க்கவும்

    ReplyDelete
  4. அருமையான கட்டுரை.
    பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஆதரிக்க அடிமை தனத்தில் ஊறிய சில பெண்களும் இருப்பது கொடுமை.

    ReplyDelete
  5. தோழி அருமையாக சொன்னீங்க இப்படி எல்லாம் சொன்ன இவங்க திருந்த மாட்டங்க கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பது போல கடும் சட்டங்களை வந்தால் மட்டுமே சாத்தியம் கண்ணகியாய் வாழ சொல்லும் பெற்றோர்கள் கோவலனை போல இருக்காதே என்று கண்டித்தால் வளரும் ஆண்கள் மாறா வாய்ப்பு இருக்கிறது ..........

    ReplyDelete
  6. சரியான கருத்துக்கள்... என் ப்ளாக்கிலும் இது போன்ற ஒத்த கருத்துள்ள பதிவு
    http://enrenrum16.blogspot.com/2012/12/blog-post_23.html

    ReplyDelete
  7. Manivannan Mani
    தாமரைச்செல்ல்வன் ஸ்ரீ சீனிவாசன் "தகவலிருந்து ................................

    தொட்டால் பிரச்சினை, ஷாக் அடிக்கும் என்பதும் , தண்டனை கிடைக்கும் என்பதும் , அதற்கு பயந்து தொடாமல் போவது என்பது இரண்டாம் பட்சம் ... முதலில் அது போன்ற எண்ணங்கள் தவறு என்ற பொது சிந்தனை வேண்டும் .. பாலியல் வன்முறை செய்தால் தண்டனைக்கு உள்ளாவோம் , என்பதை விட பாலியல் வன்முறை என்பது ஒரு வெட்கக்கேடான செயல் , தவறு , என்ற சிந்தனை மக்கள் மனதிலும் , பிள்ளைகள் மனதிலும் பள்ளிகளிலும் , வீடுகளிலும் வளர்க்கப்படவேண்டும் .. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எல்லாம் சட்டம் பற்றியும் , தண்டனைகள் பற்றியும் அறிந்திருப்பார்கள் , என்பது ஐயமே .. கடுமையான சட்டங்கள் இதை கட்டுப்படுத்தும் என்பதை விட , உளவியல் ரீதியான சமுதாய மாற்றம் தான் இதை முழுமையாக கட்டுப்படுத்தும் என்பது என் கருத்து .. நம்மிடம் சட்டங்கள் இல்லாமல் இல்லை , இருக்கிற சட்டங்களை நடைமுறை படுத்தினாலே போதும் ... பெண்கள் ஆடைகளில் கட்டுப்பாடு வந்து விட்டால் இதெல்லாம் நடக்காது என்பதும் ஒரு பொய்யான விவாதம் தான் .. 3 வயது சிறுமி , 5 வயது , 8 வயது சிறுமி , 60 வயது பாட்டி இவர்கள் கூட பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர் இவர்கள் எல்லாம் என்ன ஆடை அணிந்திநிந்தார்கள் .. இந்தியாவில் இந்த பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் இரண்டு பேரில் ஒருவர் குழந்தை என்றும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 7200 குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி வருகின்றனர் ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது... மாற்றப்பட வேண்டியது சட்டங்களையோ , பெண்களின் ஆடைகளையோ அல்ல .... பெண்களின் மீதான ஆண்களின் பார்வையையும் , எண்ணங்களையும் .

    ReplyDelete
    Replies
    1. மணிவண்ணன் மணி,
      சிறந்த கருத்தை அறிய தந்ததிற்க்கு நன்றி.

      Delete
  8. Human hails from animal: you are betraying only on man: thopul katti nadiakka yeen oru pen isikiraal? mega seerialkalil varum thagatha penkalukku ethirana ,aapasa , asinga vaarthai matrum kathikalai ethirthu pesungal. Mega serial paarpadu eththani aangal?

    ReplyDelete