April 5, 2013

திருநங்கையர் தினம்




தமிழகத்தில் பல தினங்களும் பண்டிகைகளும் பல்வேறு வரலாறுகளை கொண்டுள்ளது. தமிழர்கள் தங்கள் வாழ்வியலை பண்டிகைகளுடனும் தொடர்புப்படுத்தி தொன்றுதொட்டு வாழ்கின்றனர். பெண்களை போற்றும் வகையில் மங்கையர் தினம் கொண்டாடப்படுவது போல மக்கள் யாவரும் திருநங்கைகளை போற்றும் விதமாகவும் சரிநிகர் சமமாக திருநங்கைகளை மதிக்க குறிப்பிடத்தக்க சிறப்புமிகு தினமாக  கொண்டாடும் நாள் தான் “திருநங்கையர் தினம்”. 2008 ஆம் ஆண்டு அரவாணிகள் நலவாரியம் தோற்றுவிக்கப்பட்ட ஏப்ரல் 15-ம் தேதி திருநங்கையர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் உத்தரவின் பேரில் திருநங்கையர் தினமாக அறிவிக்கப்பட்டது.

இன்றைய சூழலில் மக்களுக்கு திருநங்கைகள் பற்றி ஓரளவு புரிதல் ஏற்பட்டு இருப்பது ஆரோக்கியமான சூழ்நிலையாக உள்ளது, இருப்பினும் ஆங்காங்கே இன்னும் பழைய நிலைப்போல திருநங்கைகளை கிண்டல், கேலி செய்வதையும் நிறுத்தினால் மிகவும் நலம். திருநங்கைகளை பற்றிய புரிதல் முதலில் வீடுகளிலிருந்து தொடங்க வேண்டும். வீட்டில் உள்ள பெற்றோர் திருநங்கைகளை முதலில் ஏற்க வேண்டும். பெற்றோரையும் உறவுகளையும் பிரிந்து அனுதினம் கண்ணீர் வடிக்கும் திருநங்கைகள் ஏராளாம். திருநங்கைகளுக்கு முதல் அரவணைப்பு வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். இத்தகைய அரவணைப்பு திருநங்கைகளின் வாழ்க்கை பாதையை மாற்றி அமைக்கும். பெற்றோர்கள் திருநங்கைகளை அவமானமாக கருதக்கூடாது. பெற்றோர்கள் தங்களுக்கு உள்ள ஆண் பிள்ளை, பெண் பிள்ளை போல திருநங்கைகளையும் ஒரு மகளாக தான் புரிதலோடு கருதி வளர்க்க வேண்டும். சுற்றமும் உறவுகளும் ஏளனகண்கொண்டு காணமால் திருநங்கைகளிடம் நல்ல உறவை பேணவேண்டும்.

ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால் அவர்களுக்கு பிறரை போல சரிசம வாய்ப்புகள் வழங்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக புறக்கணிக்கப்பட்ட சமூகமான திருநங்கைகளும் சமுதாயத்தில் நல்ல நிலையில் உயர, தன்மானம் கொண்டு வாழ்ந்திட தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் இடக்ஓதிக்கீடு செய்து தர வேண்டும். தனியார் நிறுவனங்களும் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்கள் பாலின வேற்றுமையல்லாமல் திருநங்கைகளிடம் பழக முன்வர வேண்டும். GOOGLE, ACCENTURES, GENERAL MOTORS, BANK OF AMERICA,CITIGROUP, FORD MOTORS, BP போன்ற புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள் மற்ற நிறுவங்களுக்கு முன்மாதிரியாக மூன்றாம் பாலின மக்களை பணிகளில் அமர்த்துகிறது. இத்தகைய ஆரோக்கியமான சூழ்நிலை இந்தியாவிலும் வரவேண்டும். திருநங்கைகள் பாலியல் தொழில் செய்வதையோ இல்லை பிச்சை எடுப்பதையோ விரும்பவில்லை. காலத்தின் சூழலால் தங்களின் வாழ்வாதார நிலை ஏதும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தான் சில திருநங்கைகள் இந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சில திருநங்கைகள் இட்லிக்கடை, பூக்கடை, சமையல் என்று தனியாக தொழில் தொடங்கி தங்களின் வாழ்வை முன்னேற்ற விழைகின்றனர். இத்தகைய தருணத்தில் சமுதாயம் திருநங்கைகளுக்கு முழுஆதரவும் அன்பும் தந்து உதவ முன்வர வேண்டும்.

ஊடகங்கள் திருநங்கைகளுக்கு ஒருசேர நல்லதும் கெட்டதும் செய்து வருகிறது. குறிப்பாக சினிமாக்கள் மூலமாக சில நல்ல உள்ளங்கள் திருநங்கைகளை நல்ல விதமாக சித்தரிக்கும் அதே வேளையில் திருநங்கைகளை கேலி படுத்துதல், கேவலப்படுத்தி காட்சி அமைப்பதை சில இயக்குனர்கள் கைவிட வேண்டும். இத்தகைய காட்சி அமைப்புகளால் திருநங்கைகள் மிகவும் வருத்தப்படுவதையும் கருத்தில் கொள்ளவேண்டும். திருநங்கைகளை சமூகத்தில் உள்ள அணைத்து தரப்பினருக்கும் புரிதல் ஏற்படுத்த ஊடகங்கள் முன்வர வேண்டும்.

தமிழக அரசு தொடங்கிய தமிழ்நாடு அரவாணிகள் நலவாரியம் தமிழக திருநங்கை சமூக மக்களை அடையாளம் கண்டு பயனாளிகள் பயன்பெறும் வகையில் இன்னும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்பது பல திருநங்கைகளின் விருப்பம். சிறு தொழில் தொடங்க கடனும் மானியமும் வழங்கினால் பல திருநங்கைகள் சிறப்புறு நிலை அடைவர். திருநங்கைகளின் வாழ்வாதார நிலையை மேன்படுத்தும் வகையில் தமிழக அரசு பல நல்ல திட்டங்களை அறிவிக்க வேண்டும். தமிழக அரசு திருநங்கைகளுக்கு அரசியலிலும் வாய்ப்பு வழங்க வேண்டும். பஞ்சாயத்து தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை போட்டியிட திருநங்கைகளுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும்.

இந்த உலக வாழ்க்கை என்பது அனைவருக்கும் பொதுவானது. அழகான வாழ்க்கை  சிலருக்கு பிறப்பிலே அமையும் சிலருக்கு பிறந்தபின் அமையும். எங்களின் வாழ்க்கை அழகாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய வேண்டுமானால் சமூகம் எங்களையும் சரிசமமான மனிதர்களாக பார்க்கவேண்டும். நாங்களும் வாழப்பிறந்தவர்கள் எங்களையும் வாழவிடுங்கள் நாங்களும் உங்களுடன் சேர்ந்து இந்த வாழ்கையை ரசிக்கிறோம். 

இனி ஒரு ஜகம் செய்வோம் நங்கையே
வரும் நாளில் நம் யுகமாக மண்ணிலே
வேற்றுமையற்ற மனிதம் வளர்போமே
வானின் கீழே அனைத்தும் ஓருயிரே
பாலியல் குறையும் இயற்கையின் அம்சமே
அதை அறிந்திட தெரிந்திட நாம் உரைப்போமே
பெற்றோர் அரவணைப்பு முதலில் வேண்டும்
மாற்றார் அரவணைப்பு அடுத்து வேண்டும்
கல்வியில் கேள்வியில் சமம் வேண்டும்
வேலையிலும் வாய்ப்பிலும் உரிமை வேண்டும்
ஒருவரை நசிக்கி ஒருவரை பிழிந்து
உயர்ந்தால் அது சமுதாயம் இல்லை
காட்டிலே வாழும் மிருகத்திற்கும்
நாட்டிலே உள்ள மனிதனுக்கு
பின்பு ஏது வேறுபாட்டின் எல்லை
வாழ்க்கை என்பது அனைவருக்குமே
நாமும் வாழ்ந்து பிறரும் வாழ்தழிலே
மனிதம் மலர்ந்து நிறைந்து நிற்கிறதே
இன்றைய தினம் திருநங்கையர் தினம்
அனுதினம் போராடும் மனிதர் குலம்
வாழ்க்கை ஏட்டில் வழித்தவறிய இனம்
வண்ணங்கள் தேடும் வெள்ளை முகம்
மாற்றத்தை ஏற்படுத்த விழையும் மனம்
வலிகளும் வேதனையும் தந்தது ரணம்
வாழ்நிலையை மாற்றுமோ இன்றைய யுகம்….
 
அன்புடன் 
ஆயிஷா பாரூக்

4 comments:

  1. பல தகவல்கள் அறிந்து கொண்டேன்! திருநங்கையரும் மனிதரே என்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்! நன்றி

    ReplyDelete
  2. அன்புள்ள ஆயிஷா பாரூக் அவர்களே

    தங்கள் பதிவுகளை முகநூலிலும் பரண் என்ற பக்கத்தில் பார்த்தேன் ...வெகு நாட்களாகவே தங்களிடம் கூற வேண்டும் என்று நினைத்தேன் ... இன்று தான் நேரம் கிடைத்தது ...
    மகிழ்ச்சியாக இருந்தது ....
    தந்தையர் தினத்தன்று பரணில் பார்த்த பதிவு சற்றே சிந்திக்க வைத்தது.

    ReplyDelete
  3. வணக்கம்... உலகில் யாவரும் சமமே! பேதைமை வேண்டாம். அழகான பதிவு... தொடருங்கள்.

    ReplyDelete
  4. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

    ReplyDelete